Thursday, August 15, 2019

ஒப்பில்லாத சமுதாயம்

அப்துல்ரகுமானின்  கவிதையில் சமுதாயச் சிந்தனை


உலக மொழிகளினுள் உயர்வான மொழியாக கருதப்படுவது தமிழ் மொழி. 

அத்தமிழ் மொழி உலக மொழிகள் போற்றும் அளவிற்கு செவ்வியல் பண்பும், செம்மாந்த சீரமைப்பும் கொண்டு திகழ்கின்றது. 

அத்தகைய தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாகக் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. 

அவற்றுள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புதுக்கவிதை புத்துயிர் பெற்று நாட்டில் நடக்கும் வறுமை, காதல், அரசியல், உழைப்பின் மகத்துவம், குடும்ப அமைப்பு நிலைகள் போன்ற சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாகக் காட்சியளிக்கின்றன. 

அந்த அடிப்படையில் அப்துல் ரகுமானின் புதுக்கவிதையில் ஒன்றான நேயர்விருப்பம் எனும் புதுக்கவிதையில் இடம் பெற்றிருக்கும் சமுதாயச் சிந்தனைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நேயர் விருப்பம்

தமிழ்க் கவிதை உலகில் முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும், நோக்கத்தையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனையும், சோதனையில் சாதனையும் செய்திருப்பவர் என்று அப்துல் ரகுமானைப் பற்றி கவிஞர் மீரா கூறுகின்றார்.

             காலவரிசைப்படி பார்த்தால் ‘நேயர் விருப்பம்’ தான் முதல் கவிதைத் தொகுதியாக வெளிவந்திருக்க வேண்டும். 
       
ஆனால் ‘பால்வீதி’ அவருடைய முதல் தொகுதியாக முந்திக் கொண்டதால் இது இரண்டாவது தொகுதியாக வெளிவர வேண்டியதாயிற்று. 
          
நேயர் விருப்பத்தில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் கவியரங்கக் கவிதைகள். 
கவியரங்கத்தில் தமிழ்நாட்டில் முதன் முதலாக அரங்கேறிய புதுக்கவிதை ‘மண்’ (1963) பேரறிஞர் அண்ணா ஏழெட்டு முறை திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லிக் கேட்டுப் பாராட்டிய பெருமையும் இந்தக் கவிதைக்கு உண்டு.

 இரண்டே சீர் கொண்ட ஒரே அடி என்றும், இத்தனை சிறிய வடிவம் தமிழில் மட்டுமல்ல நான் அறிந்த வரையில் வேறு உலக மொழிகளிலும் இல்லை என்று அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.


உழைப்பின் மகத்துவம்

இன்றைய சமுதாயத்தில் உழைக்காமல் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று பலர் பகல் கனவு கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். 

அப்படி பட்டவர்களுக்கு உழைப்பின் சிறப்பையும், உழைப்பின் வாயிலாக வரும் வெற்றி தான் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று நேயர் விருப்பத்தில் ‘மண்’ என்னும் தலைப்பின் கீழ் வரும் கவிதை தொகுப்பு எடுத்துரைக்கிறது.

“நீங்கள் என்னைக்
காலால் மிதிக்கிறபோது
பெருமை அடைகிறேன்
ஆனால் என்னில்
பிச்சைப் பாத்திரம் செய்து
கையில் ஏந்துகிற போது
நான் அவமானப்படுத்தப்படுகிறேன்” (நேயர் விருப்பம், ப.14)

எனும் கவிதையில் சமுதாயத்தில் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பிச்சை எடுக்காமல், அனைத்துத் தரப்பு மக்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற நயமிக்க கருத்தினைக் கூறுயிருப்பதைக் காணமுடிகின்றது.


திருமணம் பற்றிய எண்ணம்

காதலுக்குப் பின் ஒரு ஆணும், பெண்ணும் கை கூடுவது இல்லற வாழ்வான திருமணம். அத்திருமண வாழ்வு நரகவாழ்வில் அமையாமல் சொர்க்க வாழ்வில் அமைய வேண்டும் என்பதைக் கூறியுள்ளார். 

“திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படமாட்டாது
திருமணங்கள் சொர்க்கத்தை
நிச்சயிக்கும்” (நேயர் விருப்பம், ப.62.)

ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண உறவு என்பது சொர்க்க வாழ்வையே உருவாக்க வேண்டும் என்று எதார்த்தமாகக் கூறியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு திருமணம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதனையும் பதிவு செய்துள்ளார். அதை,

“தாலிக் கயிறு ஒரு
ஆயுள் தண்டனையின்
கழுத்து விலங்காகாது!
திரவப் பெண்மைக்குத்
திடப்பொருள் கிண்ணமாய்
ஆண்மை இருக்குமங்கே!” (நேயர் விருப்பம், ப.63.)

என்ற கவிதையடியின் வழியே உணரலாம். மேலும், வளரும் நாடுகளில் நாட்டை உயர்த்தப் பொருளாதாரம் வளர்வதைப் போல, இங்கே அதற்கு மாறாக இந்திய நாட்டில் பெண்களை வீழ்த்த வரதட்சணை வளமாக வளர்வதைக் கண்டிக்கும் நோக்கில் ஆண்களுக்குக் சவுக்கடி கொடுத்துள்ளதாக அமைத்துள்ளார். 

“மணம் என்றால் பணம் கேட்கும்
ஆண்விபச்சாரத்தை
பிரம்மச் சாரியத்தால்
தண்டிக்கும் நீதியுண்டு!” (நேயர் விருப்பம், ப.63.)

கடவுள் கொடுத்த குறுகிய கால வாழ்நாளில் நிலையில்லா வரதட்சணைக் கேட்பதை விட்டுவிட்டுத் தன் இல்லற மனைவியுடன் இனிமையாக வாழ ஆண்கள் உணர வேண்டும்.

ஒப்பில்லாத சமுதாயம்

சமுதாயத்திலும், நாட்டிலும் காணப்படும் பலவித இன்னல்களை எளிமையான மொழிநடையில் வருத்தத்துடனும், வேதனையுடனும் கூறியுள்ளார்.

“பொருளியல் அறிஞர்கள்
புத்தகத்தில் காட்டும்
பூலோக சொர்க்கம்” (நேயர் விருப்பம், ப.56)

“அரசியல் வாதிகளின்
அலுக்காத வாக்குறுதி” (நேயர் விருப்பம், ப.56)
“நல்லதொரு சமுதாயம்
நாம் காண வேண்டும்
அதற்காக
எட்ட முடியாத
இலட்சியங்கள் தேவையில்லை” (நேயர் விருப்பம், ப.57)

நாட்டின் உண்மையான நிலைக்கு ஏற்ப மக்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய நிலையை மறந்து எதிர்பார்ப்புக்களை நாம் வளர்த்துக் கொள்ள கூடாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஓர் ஒப்பில்லாத சமுதாயம் எவ்வாறு அமையும் என்பதை அப்துல் ரகுமான் தன்னுடைய கனவாக மட்டும் கொள்ளாமல் அவை அமைந்தால் எவ்வாறு சிறப்பாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

“அனைவரும் ஓர் நிறை
அல்ல
உழைக்கும் சாதியே
உயர்ந்த சாதி
அங்கே 
வயிறு மட்டுமல்ல
மனமும் நிறைந்திருக்கும்” (நேயர் விருப்பம், ப.65.)

“கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி” (நேயர் விருப்பம், ப.65.)

இருபத்தியோராம் நூற்றாண்டில் நம்நாடு நல்லதொரு சமுதாயமாக அமைய வேண்டும் என தன் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளாக வடித்துத் தந்திருப்பது சிந்தனைக்குரியதாகும்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா இன்குலாப்

                                                                 சிவப்பு 
         பலருக்கும் உதட்டுச் சாயம்






.                                                                                                                                                             

 இன்குலாபிற்கோ காயத்திலிருந்து வடிகிற ரத்தம்” என்னும் கவிக்கோவின் கூற்றிற்கேற்ப மக்கள் கவிஞர்  இன்குலாப் விருதுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்.

காவல்துறையின் இரவு நேரத்து அழைப்புகளும், விசாரணைகளும், சிறைகளுமே அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் எனச் சொல்லலாம்
.
எவ்வகையான சாதி, மத வட்டத்திற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தாமல் மக்கள் மனங்களில் நிறைந்த, பாவலர் 

இன்குலாபின் நேர்காணல்கள் “மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்” என்னும் பெயரில் தமிழ் அலை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாக இது அமைந்துள்ளது.


நேர்காணல்களுக்குள் நுழையுமுன் கவிஞரது கவிதை வரிகள் சிலவற்றை மீளவும் நினைவு கொள்ளல் பொருத்தமானது என்பதால், சில கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன

எல்லா ஆரம்பக் காலக் கவிஞர்களும் தங்கள் கவிதைக்கான உந்துதலைத் திரைப்படப் பாடல் மெட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களின் ஈடுபாட்டிலும் பெறுவார்கள். 

அதைப் போன்று கவிஞர் இன்குலாப் தன்னுடைய கவிதை 

இலக்கியத்தின் பிரவேசம் முதலில் பாடல்களாக அரும்பிப் பின்னர்,

     புதுக்கவிதையாகப் பரிணமித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பின் போது, அறிமுகமான மீரா - இராசேந்திரன்(வகுப்பாசிரியர்), பிரேம்சந்திரன் (ஆங்கிலப் பேராசிரியர்) சுப்பையா என நீளும் ஆசிரியர்களின் மூலமாகத் தமிழுணர்வும், இயக்கச் சிந்தனையும் கொண்டவராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதை நினைவு கூர்கிறார்.

தொடக்கக் காலத்தில் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தவர் கவிஞர் இன்குலாப். 1968இல் நடந்த வெண்மணிச் சம்பவம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதைப் பதிவு செய்துள்ளார். அந்நிகழ்வைக் குறிப்பிடுகையில், “உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது, உழவுத் தொழிலாளியினர் மீது தொடுக்கப்பட்ட கோரமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்” (ப.44) என்று கூறியிருக்கிறார்.


         அதன் பின்னர் 69களில் நக்சல்பாரி இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பு பொதுவுடைமை இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
சோஷலிசமும், கம்யூனிசமும் பேசியவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொடர்பு கொண்டார். புரட்சிகர அமைப்பில் இணைத்துக் கொண்டு, இலக்கியப் பணிகள் ஆற்றியவண்ணம், இன்னும் சொல்லப்போனால் தலைமறைவு வாழ்க்கையையும் கொஞ்ச காலம் வாழ்ந்தவர்.

அவசர கால நிலை 1975இல் பிறப்பிக்கப்பட்டபோது, ‘மனிதன்’ இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகளும் அதற்காக அன்றைய நாளில் காவல்துறை தேடியலைந்ததும் தனிக்கதையாக இந்நேர்காணல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தற்காலத்தில் தலித் இலக்கியங்கள், பெண்ணிய மொழி ஆகியனவற்றின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.


              இது குறித்து வினா முன்வைக்கப்படுகையில், மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் முறை.
சிந்தனை விடுதலையை அவாவி நிற்கையில் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள மரபு ரீதியான கட்டுப்பாடுகளை மீறுதல் தவிர்க்க முடியாது. இதைக் காண்பவர்கள் தான் அதிர்ச்சியடைகின்றனர்.


மொழி என்பது உயர் மக்களுடைய பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கி வருகின்றது. ஆகவே, அத்தகைய பண்பாட்டுத் தளத்தை நாடாமல், தனித்த தொரு விடுதலையை நோக்கிய நகர்வாக தலித், பெண்ணிம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.


             மதம், சாதி, அரசியல் முதலானவற்றின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்புகையில் தெரியக்கூடிய நியாயம், அந்த நியாயங்களுக்குத் தடையாக அதிகாரம் நிற்கையில் அதை உடைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் நினைப்பே தன் கவிதையில் பாடுபொருளாக இருப்பதை உணர்த்துகிறார்.


               கவிதைகள் மட்டுமின்றி, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய இன்குலாபின் நாடகங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாறே ஆகும்.

               “வரலாற்றை ஒரு திறனாய்வு அடிப்படையில் பொற்கால மாயைக்கு இடம் கொடுக்காத வகையில், மன்னனுக்குரிய புகழ்பாடாமை,
போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி குறித்துக் கவிஞரின் நேர்காணலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


              ‘அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. நான் இயற்கையைப் பார்க்கிறேன். என் படைப் புகளில் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று கூறும் கவிஞர் இன்குலாப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதும்,

அழகியல் மறுக்கப்பட்ட நிலையில் வெவ் வேறு விதங்களில் அதனை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைதான் என்பார். (பக்.125)
போராட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஓர் அனுபவமிக்க கவிஞரின் வாழ்வியலைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைகிறது-.


சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா


என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.


வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.


எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்
இன்று

ஒரு பகலைப்போல
வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பம்போலத்
தலைமறைவாகவும்
நீங்கள் நடந்து செல்லாத
நாடேது?
ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்

     .இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:


ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்
காலில் கட்டிய சதங்கை
இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்
அழுது கொண்டிருக்கிறது
இன்னும்
இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்
என் சகோதரன் தசைகள்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்
நான்
கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு
கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து
இங்கிலீஷ் ம்யூசிக்.
தொழிற்சங்கங்களின் தேவை,
பணி பற்றிய நக்சல் பார்வை 

கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக                                                                                                                                                                   
என்ற இடிகளின் முழக்கத்தை
ஒலிக்க வேண்டிய உனது பேரிகை
“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா
முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.

தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.

அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி  காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது

 வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.

அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?
என்பதை சிந்திப்போம்.

புதுக்கவிதை முனைவர்.இரா.குணசீலன்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)


முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பாஆசிரியம்வஞ்சி,கலிபரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவுமில்லாத

கருத்துக்கள் தம்மைத் தாமே

ஆளக் கற்றுக்கொண்ட புதிய

மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார்பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே,ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட்போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’லகு கவிதை’ விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.
புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்றபுதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத்தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன்,போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்துதமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில்தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப்பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ்மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன்,சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள்மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால்இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான.பிச்சமூர்த்திகு..ராசகோபாலன்,.நாசுப்பிரமணியன்புதுமைப்பித்தன் போன்றோர்மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.
 2.எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை,கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில்புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில்தொடர்ந்ததுமயன்சிட்டிவல்லிக்கண்ணன்,ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்குசிறப்பு சேர்த்தனர்
3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலியஇதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமைதந்து வெளியிட்டன. புவியரசுஞானி,முல்லைஆதவன்அக்கினிபுத்திரன்சிற்பிகங்கைகொங்காண்டான்தமிழ்நாடன்சக்தி கனல்,மு.மேத்தாதமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   
        சில புதுக்கவிதைச் சான்றுகள்
  நல்ல காலம் வருகுது                                                               உன்கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                கடிகாரத்தின் கையில்
  தெருவிலே நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           

முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக்கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில்புதுக்கவிதையின் தோற்றத்தையும்அதன்வளர்ச்சியையும் நன்கு உணரலாம். mybrotherunathamizhblogspot.com